பாரி வேட்டையாடுவது குற்றம்: வனத்துறையினர் எச்சரிக்கை
திருச்சி, பிப்.25 மகாசிவராத்திரியை முன்னிட்டு பாரி வேட்டையாடுவது குற்றம்.
மணப்பாறையில் வனத்துறையினர் எச்சரிக்கை விழிப்புணர்வு பிரச்சாரம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வனத்துறை சார்பில் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்வது தொடர்பான எச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு துண்டு பிரசுரம் வழங்கினர். மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாகாசிவராத்திரியை முன்னிட்டு கிராமப்புறங்களில் மக்கள் பாரி வேட்டைக்குச் செல்வது அவர்களது பாரம்பரியமான வழக்கமாகும். பாரி வேட்டையில் வனப்பகுதி மற்றும் தனியார் நிலங்களில் முயல்களை வேட்டையாடுவது வழக்கமாக செய்து வருகின்றனர்.
ஆனால் முயல்கள் வேட்டையாடுவது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றம் என்பதால் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வனத்துறையினர் மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி மணப்பாறை, புத்தாநத்தம், வீரப்பூர், எலமணம், வளநாடு, சமுத்திரம், கைகாட்டி, பாலக்குறிச்சி, கொடும்பபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். அதில் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது, மது அருந்துவது, கால்நடைகளை மேய்ப்பது, தேன் எடுப்பது, தீ பந்தம், தீ உள்ளிட்டவற்றை வனப்பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடாது, இதே போல் வனப்பகுதி மற்றும் வனப்பகுதியை சுற்றியுள்ள தனியார் நிலங்களில் வேட்டையாடுவதோ, வலை கட்டுவதோ, மயில்களுக்கு மருந்து வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது மீறுபவர்கள் மீது வனக்குற்றங்கள் செய்பவர்கள் மீது 1882 ம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டப்படியும், 1972 ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படியும் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒலிபெருக்கி மூலம் வனச்சரகர் மேரிலென்சி அறிவிப்பு செய்தார்.
மேலும் வனவர்கள் செல்வேந்திரன், செல்வம், வனக் காப்பாளர்கள் பாலமுருகன், மூர்த்தி, ஆரோக்கியம்மாள், பிரதீபா, ராமஜெயம், ஜான்சிராணி, கஸ்பர்ராஜ் ஆகியோர் வனச்சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடையே வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.