திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது;-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோவின்) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்க்கு குறுகிய கால (ஒன்று முதல் ஆறு மாதம் வரையிலான) திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது. மாணாக்கர்களின் தகுதிக்கேற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல மாணவ, மாணவியர் தங்களுக்குத் தேவைப்படும் தொழில் நுட்பப் பயிற்சியினை மேற்கொள்ள தாட்கோவின் http://training.tahdco.com என்ற இணையதளத்தின் வழியே தாங்கள் விரும்பும் பயிற்சியினைப் பதிவேற்றம் செய்து இத்திட்டத்தினை கட்டணமின்றி பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்துப் படிகள் வழங்கப்படும் இப்பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு SCVT / SSC சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.
திறன் மேம்பாட்டுப் பயிற்சி முடித்து சான்று பெற்ற பயிற்சியாளர்கள் http://training.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் மாவட்ட மேலாளரிடம் தாங்கள் பயின்ற பயிற்சிக்கு தொடர்பான தொழில் தொடங்கிட http://tahdco.application.com என்ற தாட்கோ இணையதளத்தில் தொழில் முனைவோர் திட்டம் (EDP) அல்லது இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் (SEPY) திட்டத்தின் விண்ணப்பத்தினைப் பதிவு செய்து பயன்பெறலாம். அரசு மானியத்துடன் கூடிய வங்கிகடன் வழங்க ஆவண செய்யப்படும். ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளரை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தாட்கோ அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0431 2463969 என்ற தொலைபேசியின் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.