தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது
திருச்சி மாநகரத்தில் கோரிமேடு, கருமண்டபம் அசோக்நகர், கே.கே.நகரில் உள்ள நேரு தெரு ஆகிய இடங்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், செசன்ஸ் கோர்ட் காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை நடந்த பகுதிகளில் கடந்த 2 மாதம் காலமாக பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டன் வயது 26, த.பெ. சங்கிலிமுத்து என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் எதிரி மணிகண்டன் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அங்கு பயணச் செலவுக்கு தன்னிடம் பணமில்லாததால் நகைகளை திருடியதாகவும் ஒப்புக்கொண்டதின் பேரில் எதிரியை கைது செய்தும், அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிரியிடமிருந்து 48 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. மேலும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மணிகண்டனுடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேற்கண்ட எதிரியை பிடித்து நகைகளை மீட்ட தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்கள்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.