சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கைது
திருச்சி, நவ.1 திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் பாஜக கொடி கம்பம் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீசார்,
அடக்கு முறையை கையாளும் தமிழக அரசை கண்டித்து பாஜக மாநில துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் திருச்சி லால்குடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடு முன்பு பாஜக கொடி கம்பம் நட்டதை போலீசார் பிடுங்கியதால் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் மோதலாக மாறியது.இதனையடுத்து மாநிலத் தலைவர் அண்ணாமலை நவம்பர் 1 ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பாஜக கொடிக் கம்பங்கள் நடப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் தாளக்குடி ஊராட்சியில் பாஜக கொடி கம்பம் நடுவதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டு நிர்வாகிகள் மனு அளித்தனர். ஆனால் காவல்துறை தரப்பில் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து இன்று தாளக்குடி ஊராட்சியில் கொடி கம்பம் நடுவதற்காக முன்னாள் துணை சபாநாயகர் பாஜகவின் மாநில துணைத் தலைவர் வி. பி. துரைசாமி தலைமையில் நிர்வாகிகள் வந்தனர். அதற்கு போலீசார் அனுமதி இல்லாமல் கொடிக் கம்பம் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கொடி கம்பம் நடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பாஜக நிர்வாகிகள் திருச்சி லால்குடி சாலையில் அடக்கு முறையை கையாளும் தமிழக அரசை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாநிலத் துணைத் தலைவர் வி. பி. துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்து உத்தமர் கோயில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய மாநில துணைப் பொதுச் செயலாளர் கூறியதாவது
நாங்கள் எங்கள் கட்சி கொடியை நடுவதற்கு முறையாக காவல் துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் காவல்துறையினர் கால தமாதம் படுத்தி கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததால் நிர்வாகிகள் அனைவரும் கொடிக் கம்பம் நடுவதற்கு வந்திருந்தோம். ஆனால் காவல்துறை கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி மறுத்தனர் மேலும் ஜனநாயக அமைப்பின்படி எந்த ஒரு கட்சியும் தங்களது குழுக்கம்பத்தை நடுவதற்கு உரிமை உள்ளது ஆனால் பாஜக வளர்ச்சியை தடுக்கும் விதமாக தமிழக அரசின் அடக்கு முறையால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எந்த ஒரு அடக்கு முறையாலும் ஒரு கட்சியின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. அதனால் நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம் எனக் கூறினார்.