திமிங்கல உமிழ் நீரை விற்க முயன்ற 5 பேர் கைது
திருச்சி, ஜூன் 14 திருச்சி மிளகுப்பாறை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சிலர் முகாமிட்டு வன உயிரினங்கள் தொடர்புடைய ரகசியப் பொருளை விற்பதாக வனத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் திருச்சி வனச்சரக அலுவலர் குழுவினர் அதிரடிச் சோதனை நடத்தினர். அதில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் கல்லணை பா. காத்திக், (36) , அ.வடிவேலன் (42) , கோவில்பட்டி வீ. சண்முகப் பிரியன் (38), தென்காசி மாவட்டம் பாலூர்சத்திரம் ச. குமார், கடையநல்லூர் வட்டம் குணராமநல்லூர் வி. ஜெயபால் ஞானசிங் ஆகியோ 19.200 கி.கிராம் எடையுள்ள (கட்டி வடிவ) திமிங்கலத்தின் உமிழ்நீரை விற்பனை செய்யவிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வனச்சரங்க அலுவலர்கள் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் கடந்த இரு ஆண்டுகளாக இதுபோல திமிங்கல உமிழ்நீரை விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து தடைசெய்யப்பட்ட வன உயிரினப் பொருளை விற்ற 5 பேரையும் வனத் துறையினர் நேற்று கைது செய்து, திருச்சி மாவட்ட 2 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.