அனுமதியின்றி சாலையோர மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தண்ணீர் அமைப்பு கோரிக்கை
திருச்சி, ஜூலை 11 திருச்சி திருவானைக் கோவில், கும்பகோணத்தான் சாலை உள்ள லட்சுமி வாசம் என்ற இடத்தில் பொதுமக்கள் வந்து அமருகிறார்கள் என்ற காரணத்திற்காக 15ஆண்டு புங்கமரத்தை வெட்டியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தண்ணீர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
திருச்சி,சங்கர் abodes குடியிருப்பு, லட்சுமி வாசம், கும்பகோணத்தான் சாலை, திருவானைக்கோவில் ரோட்டில் சாலையோரத்தில் சுமார் 15-ஆண்டுகள் நன்கு வளர்ந்த புங்கன் மரம் வளர்ந்து உள்ளது. இந்த மரத்திற்கு கீழே பொதுமக்கள் அமருகிறார்கள் மற்றும் காய்கறி விற்கிறார்கள், இது அங்கிருக்கும் குடியிருப்பு மக்களுக்கு இடைஞ்சலாக இருந்ததாக கருதிய அதிகாலை ஜனநடமாட்டம் இல்லாத நேரத்தில் சட்டவிரோதமாக திருச்சி மாநகராட்சியில் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் வெட்டி உள்ளார்கள்.
பொது இடத்தில் உள்ள மரத்தை வெட்ட வேண்டுமென்றால் சட்டப்படி எழுத்துபூர்வா மாக அரசிடம் அனுமதி பெறவேண்டும். அனுமதியில்லாமல் தனிநபர்கள் மரங்களை வெட்டுவதோ, சேதம் விளைவிப்பதை சுற்றுச்சூழல் குறித்த குடிமக்களுக்கான அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது அத்தியாயம் சரத்து (51)(A) பகுதியில் விரிவாக தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.
மேலும் முறையான அனுமதியோடு பொது பாதுகாப்பிற்காக கூட சாலை விரிவாக்கம் அல்லது இதர வளர்ச்சி பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டால், வெட்டப்பட்ட ஒவ்வொரு மரங்களுக்கு ஈடாக 10 புதிய மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வளர்க்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகளில் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருக்கிறது. மேலும் சமீபத்தில் கோவையில், அரச மரத்தின் ஒரு கிளையை வெட்ட அனுமதி வாங்கிவிட்டு கூடுதலாக 4 கிளைகளை வெட்டிய நபருக்கு ஒரு கிளைக்கு ரூ26,000 வீதம் ரூ.1.04 லட்சம் அபராதம் விதித்தது மாநகராட்சி குறிப்பிடதக்கது.
எனவே இந்த வேகாத அக்னி வெயிலிலும் சுமார் 15-ஆண்டுகள் நிழல் தந்து பயன்தந்துள்ள புங்க மரத்தை சட்டவிரோதமாக அரசிடம் எவ்வித முன் அனுமதியும் பெறாமல், மரத்தை வெட்டியவர்கள் இந்த சட்டவிரோத செயலுக்கு துணையாகயிருந்தவர்கள் மீது உயர்நீதிமன்ற
வழிகாட்டுதலின்படி வெட்டப்பட்ட ஒவ்வொரு மரங்களுக்கு ஈடாக 10 புதிய
மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க வலியுறுத்துவதோடு, குற்றவியல் நடவடிக்கையை திருச்சி மாநகராட்சி ஆணையர் , திருச்சி மாவட்ட ஆட்சியர் எடுக்கும் படி மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவருமான கே.சி.நீலமேகம் கேட்டுக் கொண்டுள்ளார்.