கோரிக்கை புறக்கணித்தால் தக்க பதில் கொடுப்போம் : தமிழ்நாடு அரசுக்கு “டிட்டோஜாக்” எச்சரிக்கை

0 209
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 17 தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கோரிக்கைகளை புறக்கணித்தால்-2026 ஆம் ஆண்டு தக்க பதில் கொடுப்போம்- பேட்டி- நீலகண்டன் (டிட்டோஜாக்- மாவட்ட ஒருங்கிணைப்பாளர்)

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மேலும் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதி திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதிய குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி கலைக்கப்பட்டு ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் மாணவர்களின் கல்வி நலன் கருதி காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்பிட வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு காலை முறை ஊதியம் வழங்கிட வேண்டும். குறிப்பாக அரசாணை 243 ரத்து உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் கூறியது:

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக பலமுறை பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எங்களுடைய கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாத கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். திமுக அரசு தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்து திமுக அரசு ஆசிரியர்களை வஞ்சிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பலகட்ட பேச்சுவார்த்தையில் எங்களுடைய பிரதான கோரிக்கைகளை முன்வைத்து மனுவாக அளித்துள்ளோம் அதில் குறிப்பிட்ட அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளோம் என்றார்.

மேலும் ஒரு சில ஐஏஎஸ் அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு மாநில அரசு ஆசிரியர்களின் கோரிக்கையை நிராகரித்து வருகிறது இதை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் இதனுடைய எதிரொலி நிச்சயம் இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார். ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் ஆசிரியர்களை புறக்கணித்தாலோ அல்லது வஞ்சித்தாலோ அதன் விளைவுகள் என்ன என்பது தேர்தல் நேரத்தில் தெரியும், இது கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி அனைவருக்கும் தெரியும் ஆகையால் காலதாமதம் படுத்தாமல் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

பள்ளிகளில் பா வடிவில் மேசைகள் அமைப்பதை கைவிட வேண்டும் மாணவர்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகிறார்கள் ஆகையால் மீண்டும் பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.