ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அதிகாரிக்கு மிரட்டல்: கம்யூனிஸ்ட் கட்சிநிர்வாகி கைது
திருச்சி ஆக.6 திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் சாத்தார வீதி வடக்கு கோபுர வாசல் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அகற்றப்பட்டது. இந்த பணியில் திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் இந்து சமய அற நிலையத் துறை உதவி ஆணையர் லட்சுமணன் (வயது 58) ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக சி.பி.ஐ மாவட்ட கமிட்டி உறுப்பினர் சொக்கி என்கிற சண்முகம் மீது திருவரங்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் கீதா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி,சொக்கி என்கிற சண்முகத்தை கைது செய்தார். கைது செய்யப்பட்ட சொக்கி என்கிற சண்முகம் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.