நிலத்தகராறில் கர்ப்பிணி பெண்ணை தாக்கிய தாய் – மகன் கைது
திருச்சி, ஜன.20 முசிறி அருகே நிலத்தகராறில் கர்ப்பிணி பெண்ணை தாக்கிய தாய் மற்றும் 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். கர்ப்பிணி பெண்ணை தாக்கும் வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா அரசலூர் கங்கா நகரைச் சேர்ந்தவர் அரசன் (56). கூலித் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அரசனின் இரண்டாவது மகள் கவிதா உடல்நலக்குறைவு காரணமாக தொட்டியம் பாலசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரைப் பார்ப்பதற்காக அரசன், அவரது மனைவி சந்திரா, மகள்கள் கோகிலா, தேவிகா, வினோதினி, சத்தியா ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றனர். இதில் சத்தியா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அப்போது மருத்துவமனை வாசலில் அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த பாலாஜியின் மனைவி ஹேமா (36) மற்றும் அவரது மகன் தரணிவர்ஷன் (16) ஆகியோர் திடீரென அரசனிடம் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தரணிவர்ஷன் மற்றும் அவரது தாயார் கர்ப்பிணி பெண் சத்தியாவை சரமாரியாக தாக்கியுள்ளனர், தடுக்க வந்தவர்களையும் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் காயமடைந்த சத்தியாவை தொட்டியம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அரசன் தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து கர்ப்பிணி பெண்ணை தாக்கிய ஹேமா, அவரது மகன் தரணிவர்ஷன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கர்ப்பிணி பெண்ணான சத்யாவை தாய் மற்றும் மகன் தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.