திருச்சியில் பிப்.1 4 இல் புத்தகத் திருவிழா
திருச்சி, பிப்.11 திருச்சியில் பிப்.14 ஆம் தேதி புத்தகத் திருவிழா தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் வெஸ்டிரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகமும், பப்பாசி இணைந்து பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை திருச்சி புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.
புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல தமிழ்நாடு அரசின் ஆணைப்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்பொழுது திருச்சி புத்தகத் திருவிழா 2026 செயிண்ட் ஜான்ஸ் வெஸ்டிரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் 130 புத்தக அரங்குகளும், 100 க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களின் புத்தகங்களும் அனைத்து வகையான வாசகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் விற்பனைக்கு வகையில் வைக்கப்படவுள்ளது.
தினந்தோறும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பள்ளி மாணவ, மாணவிகளின் மனதை கவர்ந்திடும் வகையில் பல்வேறு பல்சுவை கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு மேல் தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரை வீச்சும், மேலும் தலைசிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களுக்கு பாராட்டி சிறப்பிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
திருச்சி புத்தகத் திருவிழா பிப்ரவரி 14 சனிக்கிழமை தொடங்கி பிப்ரவரி 22 ஞாயிறுக்கிழமை வரை தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். மேலும், இவ்வளாகத்தில் உணவு அரங்குகள் மற்றும் குடிநீர், கழிவறை வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் என தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நிறைவு விழா (22.02.2026) நாளன்று வீரயுக நாயகன் வேள்பாரி நாடகம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இப்புத்தகத் திருவிழாவை கண்டுகளிக்க பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் அனுமதி இலவசம். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.