தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சி : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
திருச்சி மார்ச் 29 தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சி : திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
திமுக முதன்மை செயலாளர், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான மறைந்த கே.என்.ராமஜெயம், 14 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கேர் கல்லூரியில் அமைந்துள்ள ராமஜெயம் உருவ சிலைக்கு, அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அமைச்சர் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…
திருச்சியில் அனைத்து தொகுதிகளிலும் நிச்சயம் மீண்டும் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் வெற்றி பெறும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவதற்கு திருச்சி முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறோம். மக்களும் அதை தான் விரும்புகிறார்கள்.
திருச்சி மட்டுமல்ல திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டம் முழுவதும் உள்ள 41 தொகுதிகளிலும் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்.
பொதுமக்கள் திமுக அணிக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.
இந்த ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட்டால் திமுக வெற்றி சாத்தியமா என்கிற கேள்விக்கு ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளது. யார் போட்டியிட்டாலும் திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வெற்றி பெற வைப்போம்.
இந்த முறை தேர்தலில் போட்டியிட இளைஞர்கள் மகளிர் என பலருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். மீதமுள்ள 34 தொகுதிகளிலும் அவர் சேர்த்தே கூறட்டும். 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது அவருடைய ஆசை. ஆனால் அது நிறைவேறப் போவதில்லை. திமுக அணிதான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும்.
கூட்டணியில் யாரையும் விட்டுவிடாமல் அனைவரையும் அரவணைத்து செல்லும் முதலமைச்சருக்கு பெருமை தான்.
விஜய் பிரச்சாரம் செய்வதை நாங்கள் ஏன் தடுக்க போகிறோம். அவரவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது திமுகவை விமர்சனம் செய்வார்கள்.
டெல்டா மாவட்டங்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அனைவரும் பாடுபடுவோம்.
திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிப்பது குறித்து நிதி நிலைக்கு ஏற்ப முடிவு எடுப்பார்கள் என தெரிவித்தார்.