திருவெறும்பூர் தொகுதி கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்கு சேகரிப்பு
திருச்சி, ஏப். 17 மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நேற்று திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
எழில் நகர், கிழக்கு குமரேசபுரம், மேல குமரேசபுரம், திருவேங்கட நகர் மற்றும் மாதா கோவில் தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடையே அவர் உரையாற்றியதாவது நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் : கடந்த 2021 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் மட்டும் சுமார் 8,03,89,967 மதிப்பீட்டில் சாலைப் பணிகள், பள்ளிச் சீரமைப்பு, புதிய அங்கன்வாடி மய்யங்கள், சிறு பாலங்கள் மற்றும் குடிநீர் வசதி எனப் பல்வேறு திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த 2016 இல் நான் முதன்முதலில் இத்தொகுதியில் போட்டியிட்டபோது, என்னை யாரென்று தெரியாத நிலையிலும் நமக்காக உழைப்பார் என நம்பி, ஒவ்வொரு வீட்டிற்கும் அழைத்துச் சென்று வெற்றி பெற வைத்தவர்கள் கலைஞரின் உடன்பிறப்புகளாகிய நீங்கள்தான். 2016 (எதிர்க்கட்சி எம்.எல்.ஏ): நீங்கள் அளித்த 10 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற முடிந்தது.2021 (ஆளுங்கட்சி அமைச்சர்): நீங்கள் அளித்த 10 கோரிக்கைகளில் 7 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நீங்கள் அளித்த ஒரு வாக்கினால் தான், இன்று தமிழகம் முழுவதும் 20 லட்சம் மாணவர்கள் காலை உணவுத் திட்டம் மூலம் பயனடைகின்றனர். விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், தோழி விடுதிகள் எனப் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்கள் சாத்தியமாகியுள்ளன.
தொகுதி வளர்ச்சி: கடந்த ஐந்து ஆண்டுகளில் திருவெறும்பூர் தொகுதியில் மட்டும் ரூ. 450 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே விளையாட்டு வீரர்களுக்காக ஒலிம்பிக் அகாடமி இத்தொகுதியில்தான் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மூன்று முறை அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்க வருகை தந்தது திருவெறும்பூர் தொகுதிக்குக் கிடைத்த பெருமையாகும். மீதமுள்ள கோரிக்கைகளையும் நிறைவேற்ற, வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை மீண்டும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், திருவெரும்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கருணாநிதி, கிருஷ்ணசமுத்திரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரம்யா, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.