ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்தல் குறித்த விழிப்புணர்வு முகாம்
திருச்சி, மே 14 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திண்ணியம் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றிய விவசாயிகள் பயிற்சி இன்று நடைபெற்றது.
இதில் லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சத்திய பிரியா கலந்து கொண்டு மண் மாதிரி சேகரித்தல்,தக்கை பூண்டு விதைப்பு, மண்புழு உரம் பயன்படுத்துதல், ஊட்டமேற்றிய தொழு உரம் பயன்படுத்துதல், பருவத்தில் பயிர் செய்தல், ஜிப்சம் இடுதல் மற்றும் சான்று பெற்ற விதைகள் பயன்படுத்துதல் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
உழவன் அறக்கட்டளை சார்பில்ஜெகன் பேசுகையில் பாரம்பரிய நெல் சாகுபடி, இயற்கை இடு பொருள்கள் தயார் செய்தல், பஞ்சகாவியா மீன் அமிலம் பயன்படுத்துதல் பற்றி விரிவாக விவசாயிக்கு விளக்கி கூறினார்.
உதவி வேளாண்மை அலுவலர் எடிசன் பேசுகையில் நில உடமை பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் கணினி சிட்டா உடன் பதிவு செய்து விவசாய அடையாள எண் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொண்டார் . இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை விஸ்வநாதன் உதவி வேளாண்மை அலுவலர் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரி செல்வன், உதவி தொழில் நுட்ப மேலாளர் கார்த்திக் ஆகியோர் செய்து இருந்தனர்.
திண்ணியம் கிராமத்தைச் சேர்ந்த பல முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி தெரிந்து கொண்டனர்.