மிரட்டும் போதை ஆசாமிகள் – காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை: காஜாப்பேட்டை பொதுமக்கள் வேதனை

0 17
Stalin trichy visit

திருச்சி, மே 25  போதை பொருட்களை கட்டுப்படுத்தக் கோரி காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை எடுக்கவில்லை என்றும், காவல்துறையில் புகார் கொடுத்தவர்கள் வீடுகள் மீது கல் எறிவோம் என்று -போதை ஆசாமிகள் மிரட்டுவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த காஜாப்பேட்டை பொதுமக்கள் தெரிவித்தனர்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாபேட்டை பசுமடம் பகுதியில் கஞ்சா, போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகளின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் திரண்டு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

​மனு அளித்த பின் அப்பகுதியில் வசிக்கும் ஜெய்லானி என்ற பெண் அளித்த பேட்டியில்:–

​நாங்கள் கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக காஜாபேட்டை பசுமடம் பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் குடியேறிய பரக்கத் நிஷா என்ற பெண், போதை மாத்திரைகள், கஞ்சா மற்றும் போதை ஊசிகளை சப்ளை செய்து வருகிறார். ​வெளியில் இருந்து வரும் நபர்களால் எங்கள் பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் என ஒட்டுமொத்த இளம்தலைமுறையும் சீரழிந்து வருகிறது. நன்றாக வேலைக்குச் சென்று கொண்டிருந்த சிறுவர்களை, இதை விற்றால் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறேன் என ஆசை காட்டி இந்த போதை கும்பல் தங்களது ஏஜென்ட்டுகளாக மாற்றி அவர்களின் வாழ்க்கையையே பாழாக்கியுள்ளது.

​போதை மாத்திரைகளைப் பயன்படுத்தும் இளைஞர்கள், தங்களது சொந்த தாயாரையே அடித்து துன்புறுத்துகின்றனர். ஏதேனும் தட்டிக் கேட்டால், வீடுகளின் மீது நள்ளிரவில் கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் போது, வீட்டின் ஓடுகளை உடைத்ததால் மக்கள் வீட்டுக்குள் இருக்க முடியாமல் தவித்துள்ளனர். மேலும், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியும், உடைத்தும் இந்த கும்பல் அட்டகாசம் செய்து வருகின்றனர்.

​இதுகுறித்து திருச்சி மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ​புகார் அளிக்கச் சென்ற பொதுமக்களிடம், நீங்கள் ஏன் அங்கு இருக்கிறீர்கள்? இடத்தை காலி செய்துவிட்டுப் போக வேண்டியதுதானே?”என போலீசார் அலட்சியமாகப் பேசுகின்றனர்.

மேலும், புகார் கொடுத்துவிட்டு வந்த 3 மணி நேரத்திற்குள், சம்பந்தப்பட்ட நபர்கள் தெருவுக்குள் வந்து, யார் போலீசுக்குச் சென்றார்களோ, அவர்களின் வீடுகள் மீது கல் வீசுவோம் என வெளிப்படையாக மிரட்டல் விடுக்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகமும், மாநகர காவல் துறையும் உடனடியாகத் தலையிட்டு, காஜாபேட்டை பசுமடம் பகுதியில் போதைப்பொருள் சப்ளை செய்யும் பிரதான குற்றவாளியான அந்தப் பெண்ணை அப்பகுதியை விட்டு அப்புறப்படுத்த வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.