மணப்பாறை அருகே மோசமான சாலையை சீரமைக்க கோரி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி, ஜூலை 13 மணப்பாறை அருகே மோசமான சாலையை சரிசெய்ய கோரி மாணவ – மாணவிகள் பொதுமக்கள் சாலை மறியல்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எளமணத்தில் இருந்து கண்ணூத்து செல்லும் சாலை பல வருடங்களாக மிக மோசமான நிலையில் உள்ளது. சுமார் 4 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளதால் அந்த வழியாக செல்வோர் கடும் அவதிக்கு ஆளானதுடன் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும் மோசமான சாலையால் உரிய நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை இருந்து வருவதாகவும் இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ – மாணவிகள் எளமணத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் புத்தாநத்தம் – கல்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டம் நீடித்த நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்மந்தபட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.
பள்ளி மாணவர்கள் சாலை வசதி கேட்டு மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்மபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.