தா.பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி அளிப்பு பொதுக்கூட்டம்
திருச்சி , மார், 18 திருச்சி மாவட்டம், தா.பேட்டை கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரவி, ரங்கராஜ், ஜெய்ஹிந்த் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரமோகன், பாலகுமாரன் மற்றும் சுப்ரமணியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், மத்திய அரசின் தற்போதைய செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தனர்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய நிதிப்பங்கீட்டை வழங்காமல் மத்திய அரசு புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து உயர்ந்து வரும் சமையல் எரிவாயு (சிலிண்டர்) விலையைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர். பொதுமக்களை பாதிக்கும் சிலிண்டர் தட்டுப்பாட்டை நீக்கி, தடையின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிகழ்வில் கட்சியின் கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்டத்தின் நிறைவாக வார்டு உறுப்பினர் சத்யா நன்றி கூறினார்.