விமான நிலையத்தில் கதறி அழுத தடகள வீராங்கனை தனலட்சுமி
திருச்சி மாவட்டம் குண்டூரை சேர்ந்தவர் தமிழக தடகள வீராங்கனையான தனலட்சுமி பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு, தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். இந்த நிலையில் ஒலிம்பிக் தகுதி சுற்றில் நிர்ணயிக்கப்பட்ட ஓட்டப்பந்தய தூரத்தை மிக குறைந்த நேரத்தில் கடந்த தனலட்சுமிக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து போட்டியில் கலந்து கொள்ள பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இருந்து டோக்கியோவிற்கு சென்றார்.
இந்த நிலையில் ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்க டோக்கியே சென்றிருந்த தனலட்சுமியின் அக்காள் கடந்த 12.7.21 அன்று திடீரென உயிரிழந்தார். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தனலட்சுமியின் கவனம் சிதறிவிடக்கூடாது என்பதற்காக அவரது குடும்பத்தினர் அக்கா இறந்ததை தனலட்சுமியிடம் தெரியப்படுத்தாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், திருச்சி விமான நிலையம் வந்த தனலட்சுமியிடம் தகவலை தெரிவித்த போது துக்கம் தாங்காமல் விமான நிலையத்திலேயே அவர் கதறி அழுதார். தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பார்ப்போரை கண்கலங்க செய்தது.