உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
திருச்சி மாவட்டம்,புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், ரெட்டிமாங்குடி ஊராட்சியில், லால்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றியங்களைச் சார்ந்த 109 ஊரக குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கும் வகையில் ரூபாய் 248.59 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் 36.84 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதியை அமைச்சர் ஆவதற்கு நாங்கள் யாரும் எந்தவித எதற்கும் தெரிவிக்கவில்லை அதை முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாடு முதலமைச்சர் தான் அவர் அறிவிப்பதற்கு நாங்கள் கட்டுப்பட போகிறோம். தமிழ்நாடு அரசு இயற்றக்கூடிய பல்வேறு சட்டங்களுக்கு விளக்கம் அளித்தும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இது குறித்து பொதுமக்களே பலர் அந்த விமர்சனத்தை முன்வைக்கின்றனர் ஆளுநருக்கு பலர் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை உய்யக்கொண்டான் ஆற்றை சீரமைப்பதற்கு சட்டமன்றத்தில் 320 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகரப் பகுதிக்குள் சுமார் 7 கிலோமீட்டர் அளவில் எந்தவித கழிவு நீரும் கலக்காமல் தண்ணீர் தூய்மையாக செல்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும். அதேபோல் கோரையாற்றின் கரையில் 40 அடி அகலம் உள்ள சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு அந்த சாலை பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து முடிவடையும் வகையில் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணிகளும் நிறைவடையும் என்று கூறினார். மேலும் முசிறி மண்ணச்சநல்லூர் துறையூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் முழுமையான குடிநீர் சென்றடைவதற்கான பணிகள் நடைபெற்ற வருகிறது அதில் ஏற்கெனவே முசிறி தொகுதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் குடிநீர் வழங்குவதற்கான பணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். விரைவில் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார், இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்தர பாண்டியன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் முரளி உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.