கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை : 3 கிராமங்களில் 144 தடை உத்தரவு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் உள்ளிட்ட 4 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு. கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலையால் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு.
அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் உள்ளது. இந்தக் கோயிலில் அந்தப் பகுதியை சுற்றியுள்ள அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், கீழன்பில் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கட்டு தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 20 தேதி கோவிலில் காப்பு கட்டுதல் நடைபெற வேண்டும். ஆனால் ஒரு சமூகத்தினர் தங்களது தெருவுக்கும் சாமியை திருவீதிவலா அழைத்து வரவேண்டும் என நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்தது. இதனால் கோயில் திருவிழா நடத்தினால் சட்டம்,ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை சுட்டிக்காட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருவாய் கோட்டாட்சியருக்கு அறிக்கை அளித்துள்ளனர். அதே நேரம் தற்போது கோயில் திருவிழா நடத்த முடியாது என்று இந்து சமய அறநிலைய துறையும் தெரிவித்துவிட்டது. அந்த உத்தரவை மீறி ஒரு சமூகத்தினர் தன்னிச்சையாக திருவிழா நடத்த ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. அவர்கள் திருவிழா நடத்தினால் மற்றொரு சமூகத்தினர் பிரச்சினை செய்து சாதி கலவரம் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று லால்குடி வட்டாட்சியர் அறிக்கை தாக்கல் செய்தார்.
ஆச்சிராமவள்ளியம்மன் கோவிலில் தற்போது திருவிழா நடத்தினால் இரு தரப்பினரிடையே சாதி பிரச்சினை, சட்டம் ஒழுங்கு ஏற்படவும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி அன்பில், ஜங்கமா ராஜபுரம், மங்கம்மாள் புரம் மற்றும் கீழன்பில் ஆகிய கிராமங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 144 கீழ் தடை உத்தரவு பிறப்பித்து லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்த தடை உத்தரவு நேற்று முதல் வருகின்ற எட்டாம் தேதி மதியம் 2 மணி வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.