தூய்மைப் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
மணப்பாறையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியை புறக்கணித்து திடீர் போராட்டம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட27 வார்டுகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள நிரந்தர தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளான தூய்மை பணியாளர்கள் இதுகுறித்து சம்மந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என கருதப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று காலை பணியை புறக்கணித்து நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவம் பற்றி தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஊதியம் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.