சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை மறுதினம் சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை அடைப்பு
திருச்சி, அக். 26 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் வருகின்ற 28 ம் தேதி சனிக்கிழமை பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணம் நடைபெற உள்ளதால் பிற்பகல் 3 மணிக்கு விளக்கு பூஜையும், மாலை 5 மணிக்கு சாயராட்சை பூஜையும் முடித்து மாலை 6:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதும்,முதன்மையானதும் அருள்மிகு மாரியம்மன் கோவிலாகும்.
இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களிலும் அமாவாசை பௌர்ணமி போன்ற தினங்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் பக்தர்கள் முதல் நாள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்து இரவில் கோயில் வளாகத்தில் தங்கி அதிகாலையில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வருகின்ற 28 ம் தேதி சனிக்கிழமை பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணம் நடைபெற உள்ளதால் பிற்பகல் 3 மணிக்கு பௌர்ணமி விளக்கு பூஜையும், அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு சாயராட்சை பூஜையும் முடித்து மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படும். இந்த நேரத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை. மறுநாள் 29 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கோயில் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.