மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டி

0 343
Stalin trichy visit

திருச்சி, பிப்.22 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பெரிய குளத்துபட்டியில் உள்ள புனித வனத்து அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கோவில்களை அவிழ்த்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, கரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்க, மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி வருகின்றனர். இதில் தன்னை அடக்க வந்த வீரர்களை காளைகள் மிரட்டியதும், திமிலை பிடித்த வீரர்களை தலைகீழாக தூக்கி வீசி, சில காளைகள் துவம்சம் செய்தன. எத்தனை பேர் எதிரே வந்தாலும், என்னை எதுவும் செய்ய முடியாது என்ற இறுமாப்புடன் கம்பீரமாக நடந்து செல்வதை போன்ற காளைகளையும் களத்தில் காண முடிந்தது. அந்தரத்தில் பறக்க விட்டு சில காளைகள் வீரர்களை அலற வைத்தன. சீறிவரும் முரட்டுக்காளைகளின் திமிரை, திமிலை பிடித்து லாவகமாக அடக்கிய இளைஞர்களின் அசாத்திய துணிச்சலைக் கண்ட பார்வையாளர்கள் ஆரவாரத்தால் மாடுபிடிவீரர்களை உற்சாகப்படுத்தினர்.
வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், சைக்கிள், அண்டா, மிக்சி, மின்விசிறி, ரொக்கப்பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த ஜல்லிகட்டில் சுமார் 700 காளைகளும், 300 வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டை ஆயிரக்கணக்கான ஜல்லிகட்டு ஆர்வலர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.