இறந்தவர் உடலை அடக்கம் செய்ய சுடுகாடு இன்றி பழங்குடியின மக்கள் தவிப்பு
திருச்சி, ஜூன் 3 துறையூர் முசிறி பிரிவு சாலை அருகே பழங்குடியின மக்கள் (நரிக்குறவர்) காலனி உள்ளது இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் துறையூர் பழங்குடியின மக்கள் காலணியில் வசித்து வந்த சின்ன பொண்ணு (வயது 90) என்பவர் நோய்வாய்ப்பட்டு உடல் நலக் குறைவால் இறந்தார். இவரை இறுதி சடங்கு செய்வதற்காக அம்மாபட்டி ஏரியில் புதைப்பதற்காக எடுத்து சென்று உள்ளார்கள் அப்போது ஏரிக்கரையில் அருகில் உள்ள விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இறந்தவரின் உடலை ஏரி கரையில் அருகில் வைத்து நரிக்குற இன மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
எங்களுக்கு என்று முறையாக இறுதி சடங்கு செய்ய இடம் ஒதுக்கி தர வேண்டும் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இது சம்பந்தமாக போராடி வருகிறோம் என்றும் பலமுறை மனுக்கள் அளித்து துறையூர் தாசில்தார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறை கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
தகவல் அறிந்து வந்த துறையூர் காவல்துறையினர் வருவாய் துறையினர் பழங்குடியின மக்களிடையே சமரச பேச்சுவார்த்தைக்கு ஈடுபட்டனர் அதற்குப் பின்பு சின்ன பொண்ணு சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது . வருவாய் துறையினர் சுடுகாடு பிரச்சினை குறித்து துறையூர் தாலுகா அலுவலகத்தில் உங்களது குறைகளை கூறுங்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பேச்சுவார்த்தை நடத்தியதின் பெயரில் விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.