மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை : மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
திருச்சி, ஜூலை 11 திருச்சி மாநகர பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சரவணண் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் 4 வார்டு, எண் 62 பஞ்சப்பூர், செங்குறிச்சி பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் இன்று காலை திடீர் ஆய்வு செய்தனர் செங்குறிச்சி பகுதியில் நான்கு வீடுகளில் சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சிய 4 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநகர பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தண்டனைக்குரிய குற்றமாகும். குடிநீர் உறிஞ்சுவதால் பொதுமக்கள் சீராக குடிநீர் பெற முடியவில்லை. தொடர்ந்து மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சினால் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும். குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் சரவணண் தெரிவித்தார்.