தற்காப்பு கலை மீது கிராமத்து மாணவ, மாணவிகள் ஆர்வம்
திருச்சி, ஜூன் 30 மணப்பாறை அருகே பின்தங்கிய கிராமத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டியில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் அசத்தினர்.

ஆரம்ப காலங்களில் சிலம்பம், யோகா, காராத்தே உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு கலைகள் கிராமங்களில் பெரும்பாலானோரிடம் இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த கலைகள் பெரும்பாலும் குறைந்து மொபைல் போன் ஆக்கிரமித்து விட்டது. இருப்பினும் பெண்கள் மற்றும் இளம் தலைமுறைக்கு தற்காப்பு அவசியம் என்பதன் அடிப்படையில் பல்வேறு கிராமங்களை தேர்வு செய்து அதில் உள்ள பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு தனியார் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் தன்னார்வமுடன் எவ்வித கட்டணமும் இன்றி சிலம்பம், காராத்தே உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
அதன்படி திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தாதகவுண்டம்பட்டியில் அருகில் உள்ள கிராமங்களான ஆமணக்கம்பட்டி, பொடங்குப்பட்டி, தாதனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு தனியார் அமைப்பு கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி அளித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மாநில அளவிலான சிலம்பம், யோகா மற்றும் கராத்தே போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்ட்களைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினார். போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஒரு பின்தங்கிய கிராமப் பகுதியில் தற்காப்பு கலையான சிலம்பம், கராத்தே உள்ளிட்ட பயிற்சிகள் மாணவ – மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கியிருப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.