கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் : டிட்டோஜேக் மாநாட்டில் தீர்மானம்
திருச்சி, ஜூலை 12 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் – திருச்சியில் நடந்த டிட்டோஜேக் ஆயத்த மாநாட்டில் தீர்மானம்.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் நடவடிக்கைக்குழுவின் மறியல் போராட்ட ஆயத்த மாநாடு இன்று திருச்சி சுமங்கலி மகாலில் நடைபெற்றது. டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் மயில் தலைமையேற்றார்.
38 மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் கருத்துக்கள் அடிப்படையில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
அதில் பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு வழங்கவேண்டும்.
தொடக்கக்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்களுக்கு பாதிப்பான நிலையை உருவாக்கியுள்ள மாநில அளவில் முன்னுரிமை என்ற அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும்.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.5400 தர ஊதியத்தை குறைத்து பெற்ற ஊதியத்தை தணிக்கை தடை மூலம் திரும்ப செலுத்த சொல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து 17.07.2025 வியாழன், 18.07.2025 வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தகுதி வாய்ந்த விடுப்பை எடுத்துக்கொண்டு மாவட்ட தலைநகர்களில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் பங்கேற்பது என் தீர்மானிக்கப்பட்டது.
மறியல் போராட்டத்தை எழுச்சியாக நடத்திட 14.07.2025, 15.07.2025 மற்றும் 16.7.2025 ஆகிய மூன்று நாட்களில் தீவிரமாக ஆசிரியர்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்துப்பேசி கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.