சலவை தொழிலாளர்களுக்கு தடுப்பணை கட்டி தர கோரி போராட்டம்
திருச்சி ஆக 18 திருச்சியை செக்போஸ்ட் அழகிரிபுரம் பகுதியை சார்ந்த சலவைத் தொழிலாளிகளுக்கு தடுப்பணை கட்டித் தருகிறேன் என்று கடந்த 15 நாட்களுக்கு முன்பு அறிவித்துவிட்டு தற்பொழுது தடுப்பணை கட்டாமல் இருப்பதையும், கொள்ளிடம் ஆற்றில் கட்டிய தடுப்பணை சேதாரமானதை சரி செய்யாமல் இருப்பதை கண்டித்தும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த மறியல் போராட்டத்தால் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டத்தை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.இதனால் அந்த பகுதியில் சுமார் 1.30 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் திருச்சி டோல்கேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறை கோட்ட அலுவலகத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டு அங்குள்ள அலுவலகத்தில் பூட்டு போடும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.