துறையூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 கோடி மோசடி: பணத்தை இழந்தவர்கள் சாலை மறியல்
திருச்சி, நவ.14 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே காளிப்பட்டியில் சிட்பண்ட்ஸ் நடத்தி 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபரை உடனடியாக கைது செய்ய பொதுமக்கள் சாலை மறியல்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியைச் சேர்ந்தவர் அப்பாவுத்துரை இவர் மாரியம்மன் சிட் பண்ட்ஸ் என்ற பெயரில் 25 வருடங்களாக நிறுவனம் நடத்தி வருகிறார் இவரது நிறுவனத்தில் ஒரு லட்சம் இரண்டு லட்சம் ஐந்து லட்சம் பத்து லட்சம் ஆகிய குரூப்புகளில் ஏல சீட்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஏலச்சீட்டு குறிப்புகளில் காளிப்பட்டி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பணம் கட்டியுள்ளனர். இது மட்டுமன்றி தீபாவளி பலகார சீட்டும் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பாக இவரது கடை வீடு ஆகியவை மூடப்பட்டது மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவர் தலைமறைவான செய்தி தெரிந்தவுடன் அவரிடம் பணம் கட்டிய ஏராளமான பொதுமக்கள் அவரது கடையை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து திருச்சி துறையூர் நெடுஞ்சாலையில் காளிபட்டியில் அப்பாவுதுரையை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காவல் நிலையத்தில் முறையாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் புகார் அளிக்காமல் சாலை மறியல் செய்வது தவறு எனக்கூறி பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் ஒரு மணி நேரமாக துறையூர் திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.