பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவிகள் விமான பயணம் : மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி வைத்தார்
திருச்சி, நவ.25 உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை (03.12.2025) முன்னிட்டு தஞ்சாவூர் அரசு பார்வைத்திறன் குறையுடையோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விமானத்தில் சென்னை செல்லும் அனுபவம் ஏற்படுத்தும் வகையில் இன்று மாவட்ட மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வருகை தந்த மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளை வரவேற்று, கலந்துரையாடி வழியனுப்பி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 அன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் விதமாக இன்று (25.11.2025) தஞ்சாவூர் மாவட்ட அரசு பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களை பாதுகாவலருடன் திருச்சிராப்பள்ளி உள்நாட்டு விமான முனைய நிலையத்திலிருந்து விமானத்தின் மூலம் சென்னை அழைத்து வந்து மெட்ரோ இரயில் அனுபவம் மற்றும் திரையரங்கத்தில் படம் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த தஞ்சாவூர் மாவட்ட பார்வைத் திறன் குறைபாடுடைய 17 மாணவர்கள் மற்றும் 4 பார்வைதிறன் சிறப்பாசிரியர்கள், செவித்திறன் குறையுடையோருக்கான பள்ளியின் 10 மாணவர்கள் 3 மாணவியர்களை மற்றும் 2 சிறப்பாசிரியர்கள் என மொத்தம் 36 மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் மாணவர்கள் மற்றும் பாதுகாவலர்களை திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து விமானத்தின் மூலம் சென்னைக்கு வழியனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் அருள் பிரகாசம்(தஞ்சாவூர்), இரா.இரவிச்சந்திரன்(திருச்சிராப்பள்ளி) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.