முசிறியில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
திருச்சி, ஜன.12 முசிறியில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி – தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகன ஓட்டிகள் பேரணியில் பங்கேற்றனர்
திருச்சி மாவட்டம் முசிறியில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முசிறி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை முசிறி சப்-கலெக்டர் சுஷ்ரி சிவாங்கி குந்தியா, டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஸ்ரீரங்கம் சுரேஷ்பாபு, திருச்சி (மேற்கு) நடராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் முகமது மீரான் ஆகியோர் சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்படுவது நோக்கம் குறித்தும், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் வாகன விதிகளை பின்பற்றி தலைக்கவசம் அணிந்தும் காரில் செல்வோர் போக்குவரத்து விதிகளை மதித்து வாகனத்தை செலுத்துவதுடன் சீட் பெல்ட் அணிய வேண்டும் என வலியுறுத்தினர்.
முசிறி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் கலந்து கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்தும், காரில் பயணித்தவர்கள் சீட் பெல்ட் அணிந்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தனர். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை அடைந்தது. அங்கு தீயணைப்புத் துறையினர் சாலை விபத்து நேரங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகள் பற்றியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் செயல் விளக்கம் செய்து காட்டினர்.