பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி, ஜன.24 திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 8 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் ஐந்து பள்ள்ளி வெள்ளூர் அரசு உயர்நிலைப்பள்ளி , வாளாடி அரசு மேல்நிலைப்பள்ளி , அமூர் அரசு மேல்நிலைப்பள்ளி , சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி , ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த 50 மாணவர்களுக்கு ஒருநாள் இயற்கை முகாம் திருச்சி வனப்பாதுகாவலர் காஞ்சனா , அறிவுரையின்படியும், மாவட்ட வன அலுவலர் சீகிருத்திகா மற்றும் உதவி வனப்பாதுகாவலர் காதர் பாட்ஷா ஆலோசனையின் நடைபெற்றது. இந்த முகாம் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரியல் பல்வகைமை, காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை வளங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.
பறவையியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்ற முத்துசாமி பறவைகள் சூழலியல் அமைப்பில் வகிக்கும் முக்கிய பங்கு, அவற்றின் சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் வெளிப்புற களப்பயிற்சியில் பறவைகளை அடையாளம் காணும் முறைகள் குறித்து விளக்கினார். இதன் மூலம் மாணவர்களிடையே பறவை பார்வை மற்றும் பறவை பாதுகாப்பு குறித்த ஆர்வம் அதிகரித்தது.
தொடர்ந்து வனச்சரக அலுவலர் ரவி காடுகள் மற்றும் வனவிலங்குகள் சூழலியல் சமநிலையை பேணுவதில் வகிக்கும் பங்கு, உயிரினங்களின் பரஸ்பர சார்பு, உயிரியல் பல்வகைமைக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
பின்னர் பசுமைத் தோழர் பாலகிருஷ்ணன் பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழல் மற்றும் மனித உடல்நலத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விளக்கி, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது, மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் சரியான கழிவு மேலாண்மை முறைகள் குறித்து செய்முறை விளக்கங்கள் வழங்கினார். மாணவர்களின் அன்றாட வாழ்க்கையில் சுற்றுச்சூழல் நட்பு பழக்கங்களை கடைப்பிடிக்க ஊக்குவிக்கும் வகையில் செயல்பாடுகளும் நடத்தப்பட்டன மாணவர்களுக்காக காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு தொடர்பான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
மேலும் வனவர்கள் கோகிலா மற்றும் விக்னேஷ் ஆகியோர் நாற்றங்கால் பராமரிப்பு முறைகள் மற்றும் மரக்கன்றுகள் நடுவதின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர் பின் வண்ணத்துப்பூச்சி பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து காணொளி மூலம் விளக்கமளிக்கப்பட்டு, வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை நிலைகள் நேரடியாக காட்டப்பட்டன. மேலும் மாணவர்கள் உயிருள்ள முதிர்ந்த பட்டாம்பூச்சிகளை இயற்கையில் விடுவிப்பதில் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, ஒத்துழைப்புடன் இந்த ஒருநாள் இயற்கை முகாம் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பொறுப்புணர்வையும் இயற்கை மீது உள்ள ஆர்வத்தையும் வளர்த்ததில் முக்கிய பங்காற்றுகிறது.