ஒன்றிய அரசின் தொகுதி மறு சீரமைப்பு மசோதா நகலை எரித்து தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஏப்.16 ஒன்றிய அரசின் தொகுதி மறு சீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏற்றி தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க அரசு இன்று தாக்கல் செய்கிறது. இந்நிலையில் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கும் விதமாக இன்று தமிழ்நாடு முழுவதும் கருப்பு கொடி போராட்டம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்திருந்தார். அதன்படி பொதுமக்கள் தங்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். திமுக கூட்டணி கட்சிகள் கருப்பு கொடி போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இன்று காலை தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாமக்கல்லில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருப்பு கொடி ஏற்றி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். மேலும் தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து எதிர்ப்பை பதிவு செய்தார்.
அதன் ஒருபகுதியாக திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஒன்றிய அரசின் தொகுதி மறு சீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏற்றி தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மேயர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.