மணப்பாறையில் தனியார் நகை அடகு கடையின் அலாரம் அடிக்கடி சத்தம் எழுப்புவதால் பொதுமக்கள் குழப்பம்
திருச்சி, ஜூன் 5 ணப்பாறையில் இயங்கி வரும் தனியார் நகை அடகு கடையின் அலாரம் அடிக்கடி சத்தம் எழுப்புவதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மணப்பாறை -மதுரை சாலையில் இயங்கி வரும் தனியார் நகை அடகு கடையின் எச்சரிக்கை அலாரம் பணி முடிந்து கடையை மூடிவிட்டு சென்ற பின்பு திடீரென ஒலிக்க ஆரம்பிக்கிறது. மேலும் இப்பகுதியில் அதிக அளவில் மருத்துவமனைகளும் உள்ளதால் கடையின் அலாரம் அடிக்கடி ஒலிப்பதால் அவசர ஊர்தி வருகிறதா அல்லது கடையில் அலாரம் ஒலிக்கிறதா என்று தெரியாமல் பலர் குழம்பிய நிலையில் உள்ளனர் .
மேலும் தனியார் அடகு கடை மேலாளரிடம் பலமுறை இதுபோன்று அலாரம் அதுவாகவே ஒலி எழுப்புவதால் அருகில் இருப்பவர்களுக்கு மிகவும் சிரமத்தை உண்டாக்குவதாக கூறியும் அடகு கடை மேலாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் மணப்பாறை காவல்துறையினர் அந்த அடகு கடையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.