மணப்பாறை அருகே நல்லாண்டவர் கோவில் புதிய ஐந்துநிலை ராஜகோபுர கும்பாபிஷேக விழா
திருச்சி, ஜூலை 2 மணப்பாறை அருகே நல்லாண்டவர் கோவில் புதிய ஐந்துநிலை ராஜகோபுர கும்பாபிஷேக விழா. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மான்பூண்டி ஆற்றங்கரையில் புகழ்பெற்ற நல்லாண்டவர் கோவில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயத்தின் முகப்பு பகுதியில் முன் மண்டபம் மட்டும் இருந்த நிலையில் அதனை அகற்றிவிட்டு புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது.
புதிய ராஜகோபுர கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கடந்த 29 ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால யாகபூஜையும், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து இன்று காலை மகாபூர்ணாஹுதி நிறைவுபெற்று கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் சிவாச்சாரியார்களால் கோபுர கலசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் இசையுடன் மந்திரங்கள் முழங்க கோபுர உச்சியில் உள்ள ஏழு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு நூதன ராஜகோபுர நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து தீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் மக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து மூலவருக்கு தீபாதாரணை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.