ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் பகுதியில் சிறப்பு குறைதீர் முகாம் : அமைச்சர் ரமேஷ் பங்கேற்பு
திருச்சி, ஜூலை 7 ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவல் பகுதியில், பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறியும் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் இன்று நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்களும் அதிகாரிகளும் களத்திற்கு நேரடியாகச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அந்த வழிகாட்டுதலின்படி, ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளில் இன்று குறைதீர் முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் திருச்சி மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
பொதுமக்கள் பட்டா பிரச்சினைகள், குடிநீர் வசதி, கால்வாய் பராமரிப்பு, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, மருத்துவ வசதிகள், மகளிர் உரிமைத்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் போன்ற அடிப்படைத் தேவைகள் தொடர்பாக மனுக்களை அளித்துள்ளனர். இந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, அரசின் வழக்கமான திட்டங்களின் கீழ் உடனடியாகத் தீர்வு காணப்படும்.
இந்த முகாம் ஒரு நாள் நிகழ்வாக மட்டும் இருக்காது; வரும் நாட்களில் மணிகண்டம், அந்தநல்லூர் உள்ளிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த முகாம்கள் நடத்தப்படும். மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் இவை தொடர்ந்து நடைபெறும்.