மணப்பாறை அருகே மல்லிகை மலையில் திடீர் தீ விபத்து
திருச்சி, ஜூலை 27 மணப்பாறை அருகே மல்லிகை மலையில் திடீர் தீ விபத்து. 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீ அணைக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கல்லுப்பட்டி பகுதியில் மல்லிகை மலை உள்ளது. வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இம்மலையில் இன்று மாலை காய்ந்த புற்கள் மற்றும் செடிகொடிகளில் பற்றிய தீ காற்றின் வேகத்தில் மலமலவென பரவியது. .இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மலை மேல் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால் தீயணைப்பு வீரர்கள் அனைவரும் அங்கு இருந்த செடி கொடிகளை வைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் மலையில் தீயணைப்புத் துறையினருக்கு உதவியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் ஏராளமான மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் தீயில் கருகின. மலையை சுற்றி குடியிருப்பு பகுதி என்பதால் குடியிருப்பு வாசிகள் அச்சத்துடனே இருந்தனர் . இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.