முசிறியில் அண்ணாமலை நடைபயண பிரச்சாரம்…
திருச்சி மாவட்டம், முசிறியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் என் மண், என் மக்கள் என்னும் தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட நடை பயண நிகழ்ச்சி நடைபெற்றது.
முசிறி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கைகாட்டி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழியில் விவசாயிகளையும், முஸ்லிம் மக்களையும் சந்தித்து உரையாடினார். பெண்களுக்கு தையல் மெஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து கைகாட்டியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது முசிறி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலத்துடன் தொடர்புடைய நகரமாகும். அக்காலத்தில் போருக்கு தேவையான போர்க்கருவிகள் மற்றும் தளவாடப் பொருட்களை தயாரிக்கும் உருக்கு ஆலை இப்பகுதியில் செயல்பட்டு உள்ளது. திமுக தேர்தல் அறிக்கைகள் கூறிய வாக்குறுதிகளை 90 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறுகிறது. முசிறியில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. மேலும் கிசான் பத்திரம்மூலம் கடன் உதவி வழங்குகிறது.விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. இலவச அரிசி வழங்கப்படுவதற்கு மத்திய அரசு 32 ரூபாயும், மாநில இரண்டு ரூபாயும் வழங்குகிறது. மத்திய அரசு செய்யும் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்ப்பதில் தமிழக அரசு போதிய கவனம் செலுத்துவதில்லை.
தமிழகத்தின் செங்கோலை பாராளுமன்றத்தில் மத்திய அரசு நிறுவியது. ஐநா சபை வரை பிரதமர் மோடி தமிழின் தொன்மை குறித்தும் மொழிகளில் மிகவும் தொன்மையான தமிழ் மொழியை அனைவரும் படிக்க வேண்டும் என பேசுகிறார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தையை ஐநா சபையில் முழங்கியவர் பிரதமர் மோடி. எனவே மத்திய அரசு தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் தேவையான பல்வேறு உதவிகளை நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டு தான் உள்ளது. இப்பகுதியில் டெல்டா விவசாயிகள் நெல் வாழை கரும்பு ஆகியவற்றிற்கு ஆதார விலையை உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு விவசாயிகளின் கோரிக்கை எடுத்துச் செல்வேன். மேலும் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வர வேண்டும், அவ்வாறு வந்தால்தான் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் கோரை சாகுபடி சிறப்பாக அமையும் என விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.கோரை பயிர் சாகுபடி மூலம் கோரை பாய் தொழிற்சாலைகளை நம்பி பல குடும்பங்கள் உள்ளதை அறிவேன். எனவே பாய் உற்பத்தி தொழில் மேம்பட மத்திய அரசு வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் மத்திய அரசை ஆதரித்து மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். முசிறிக்கு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கட்சியினர் முரசு கொட்டியும், நையாண்டி மேளம், பொய்க்கால் குதிரை, முளைப்பாரி எடுத்து வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணாமலை பிரச்சாரம் நடைபெறுத்தின் போது போக்குவரத்து நரசில் ஏற்பட்டதால் பொதுமக்களும் பயணிகளும் சிரமம் அடைந்தனர். அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு முசிறி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.