திருச்சி மாநகராட்சி மண்டலம் – 4 அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை
திருச்சி, ஜூலை 2 திருச்சி மாநகராட்சி மண்டலம் – 4 அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை; பில் கலெக்டரிடம் தீவிர விசாரணை.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே அமைந்துள்ள மாநகராட்சி மண்டலம் – 4 அலுவலகத்தில், பொதுமக்களிடம் வரி வசூல் செய்வது மற்றும் பிற சான்றிதழ்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதிகாரிகள் தொடர்ந்து லஞ்சம் பெறுவதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான குழுவினர், இன்று காலை 11 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனைக்காக அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில்கள் பூட்டப்பட்டன. வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில், அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையின் ஒரு பகுதியாக, அங்கு பணிபுரியும் பில் கலெக்டர் ஒருவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அலுவலகத்தில் கணக்கில் வராத ரொக்கப் பணம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? சான்றிதழ்கள் மற்றும் வரி வசூல் தொடர்பான ஆவணங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதா? பொதுமக்களிடம் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் ஏதேனும் சிக்கியுள்ளதா? என்ற கோணத்தில் அலுவலகத்தின் முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்து வரும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், அங்கிருந்த ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.