போதை மாத்திரை விற்பனை; திருச்சியில் 4 மாதங்களில் 369 பேர் கைது!
திருச்சி மாநகரில் போதை மாத்திரை பொருள்கள் விற்பனை செய்ததாக நான்கு மாதங்களில் 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-
மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 61 பேர் கைது செய்யப்பட்டு 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டம் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசு அனுமதியோ, உரிய அரசு சான்றிதழ் இல்லாமல், மருத்துவரின் ஆலோசனை கடிதம் இல்லாமலும் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனையில் ஈடுபட்டதாக 12 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1550 போதை மாத்திரைகள் மற்றும் 80 போதை மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 3 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநகரில் புகையிலை பொருட்கள் குட்கா போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாக 296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக போதை மாத்திரைகள் மற்றும் மருந்துகள் விற்பனையில் ஈடுபட்ட 369 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்