ஓட்டலில் தங்கி இருந்த பெண்ணிடம் நூதன முறையில் நகைகள் திருட்டு
திருச்சி டிச.1 மதுரை வாடிப்பட்டி மண்ணடி மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி அழகுமணி (வயது 35). இவருக்கு திருப்பூர் பொள்ளி காளிபாளையம் அஞ்சல் நகர் பகுதியைச் சேர்ந்த நேவி (வயது 34 )என்பவர் அறிமுகமானார்.
பின்னர் திருச்சி சத்திரம் பகுதியில் இலவச லேப்டாப் கொடுப்பதாகவும் ,அதனை தான் வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய அழகுமணி தனது மகனையும் அழைத்துக் கொண்டு நேவியுடன் திருச்சி வந்தார். பின்னர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகாமையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறையில் எடுத்து தங்கினர். பின்னர் அந்த நபர் அழகுமணியிடம், தங்க நகைகள் அணிந்தால் மடிக்கணினி தரமாட்டார்கள் என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து அழகு மணி தான் அணிந்திருந்த மூன்று பவுன் தாலிச் செயின்,
அரைப்பவன் தோடு கால் பவுன் மெட்டி ஆகியவற்றை கழற்றி தான் தங்கி இருந்த அறையில் வைத்தார். பின்னர் நேவி அழகு மணியை அழைத்துக்கொண்டு சத்திரம் பஸ் நிலையம் சென்றார். பின்னர். அவரை அங்கு சற்று நேரம் காத்திருக்குமாறு கூறிவிட்டு மாயமானார்.
பின்னர் சில மணி நேரம் கழித்து அழகு மணி தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று பார்த்தபோது அருகில் வைத்திருந்த நான்கு பவுன் நகைகளை காணாமல் திடுக்கிட்டார்.
சத்திரம் பஸ் நிலையத்தில் அவரை திட்டமிட்டு காத்திருக்க வைத்துவிட்டு அந்த நேரத்தில் ஹோட்டலுக்கு சென்று நகையை திருடி கொண்டு நேவி தப்பி ஓடியது தெரியவந்தது.
இது பற்றி அழகு மணி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கிரேசி தமிழ்ச்செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இலவச லேப்டாப் வாங்கித் தருவதாக அழைத்து, இளம் பெண்ணின் நான்கு பவுன் நகையை நூதன முறையில் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.