விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த திருச்சி மாணவர் குடும்பத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல்
திருச்சி, மார்ச் 25 விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த திருச்சி மாணவர் குடும்பத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறினார்.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் கடந்த நான்காம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் சாலை மார்க்கம் வழியாக திருச்சியில் இருந்து தஞ்சை சென்றார். அப்போது இளைஞர்கள், கட்சித் தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர். இந்நிலையில் திருச்சி மேல கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர் விக்னேஷ் (20), மற்றும் அவரது நண்பர் அருண் (21) ஆகியோர் கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு , தங்களது டூவீலரில் விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற போது தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விக்னேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் உடன் பயணித்த அவரது நண்பர் அருணுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தொடர்ந்து விக்னேஷ் மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ், தஞ்சை எம்.பி. முரசொலி ஆகியோர் மருத்துவமனையில் மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் விக்னேஷ் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் நேற்று (23.03.26) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உடற்கூறு ஆய்வுக்கு பிறகு உறவினர்களும் உடல் ஒப்படைக்கப்பட்டு நேற்று முன்தினம் (மார்ச் 24) இறுதி சடங்கு நடைபெற்றது.
இந்நிலையில் திருச்சி கீழக்கல்கண்டார்கோட்டையில் உள்ள மாணவர் விக்னேஷ் வீட்டிற்கு நேற்று (மார்ச் 24) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.