சாலை விபத்தில் செவிலியர் பலி
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிய செவிலியர் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள மேட்டு இருங்களூர் சற்குணம் தெருவைச் சேர்ந்தவர் டேவிட் செல்வகுமார். இவரது மனைவி 32 வயதான வனிதாமேரி. இவர் இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வேலையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் அதிவேகமாக வந்த கார் செவிலியர் சென்ற பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.