மணப்பாறை நகராட்சி நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் ஒத்திவைப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு, ஒப்பந்த குழு நியமன குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர் தேர்தல் ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று காலை தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. காலை 9.30 மணி முதல் 10 மணி வரை தேர்தலுக்கான நேரம் அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்ட அரங்கத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். ஆனால் அதிமுகவைச் சேர்ந்த நகர்மன்ற தலைவர், தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சி உறுப்பினர்கள், அதிமுக உறுப்பினர்கள், சுயேட்டைசகள் என 27 நகர்மன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. இதனால் தேர்தலுக்கான நேரம் முடிவடைந்து விட்ட நிலையில் யாரும் வராததால் தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். யாரும் வராததால் கூட்ட அரங்கு வெறிச்சோடி காணப்பட்டது.
மணப்பாறை நகராட்சியில் ஏற்கனவே மூன்று முறை நகராட்சி துணைத்தலைவர் தேர்தலும், இரண்டு முறை நிலைக்குழு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக நிலைக்குழு உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.