அரிய வகை நோய் : பேத்தியின் உயிரைக் காக்க ஆட்சியரிடம் தாத்தா – பாட்டி மனு
16 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய நோய் மருந்து… பேத்தியின் உயிரைக் காக்க ஆட்சியரிடம் மனு அளித்த தாத்தா பாட்டி
திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் 11 மாதப் பேத்தி அதிதி நிலானி, தசைச் சிதைவு எனப்படும் அரிய வகை ‘ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி’ (Spinal Muscular Atrophy) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்டறியப்பட்ட இந்த அபூர்வ நோய்க்கான ஒரே தீர்வு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு டோஸ் மருந்து மட்டுமே என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் இவ்வளவு தொகையைத் திரட்ட இயலாத நிலையில், தற்போது தற்காலிகமாக 17,000 ரூபாய் மதிப்பிலான சொட்டு மருந்து மட்டுமே குழந்தைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வழியின்றித் தவித்த தாத்தா மற்றும் பாட்டி , திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து தமிழக அரசும், மத்திய அரசும் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் சமூக ஆர்வலர்களும் உதவிகரம் நீட்ட வேண்டும் என உருக்கமான கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
கிட்டத்தட்ட 16 கோடி ரூபாய் செலவிலான இந்த அரிய சிகிச்சைக்கு நிதி திரட்டும் முயற்சியில் குடும்பத்தினர் இறங்கியுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.