பட்டாவில் திருத்தம் செய்ய லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ அலுவலக நேர்முக உதவியாளர் கைது
திருச்சி, அக்.23 தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை ரோட்டை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 31) என்பவரின் உறவினருக்கு சொந்தமான திருச்சிராப்பள்ளி, கே.சாத்தனூரில் அமைந்துள்ள 11070 சதுரடி உள்ள இடத்திற்கு பட்டாவில் ஆணையர், திருச்சி மாநகராட்சி என்று தவறுதலாக உள்ளதை கணினியில் மாற்றம் செய்ய திருச்சி வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்தும் இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்/வட்டாட்சியர் அண்ணாதுரை என்பவரை நேரடியாக தொடர்பு கொண்டு கேட்ட போது மேற்படி நேர்முக உதவியாளர் அண்ணாதுரை மேற்படி விண்ணப்ப மனுவை பரிந்துரை செய்ய புகார்தாரரிடம் ரூ.2,00,000/- கேட்டுள்ளார். இதனை கொடுக்க விரும்பாத புகார்தாரர் இது தொடர்பாக இன்று திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சக்திவேல்,பிரசன்னவெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் காவல் ஆளினர்களுடன் இன்று மாலை சுமார் 5.40 மணிக்கு இரசாயண பவுடர் தடவிய பண நோட்டுகளை புகார்தாரரை திருச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனுப்பி பொறி வைப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது திருச்சி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் அண்ணாதுரை (வயது 50) புகார்தாரரிடம் இருந்து பவுடர் தடவப்பட்ட லஞ்ச பணம் ரூ.2,00,000/- கேட்டு பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டார். இதனை தொடர்ந்து அவரிடம் அவரது அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இது தொடர்பாக நேர்முக உதவியாளர் அண்ணாதுரை வசித்து வரும் துவாக்குடிமலை, அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.