சக்தி நீட் அகாடமியின் ரூ.2 கோடி மெகா திட்டம்: 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி, உணவு & தங்குமிடம்
திருச்சி, ஆக.18 சக்தி நீட் அகாடமியின் ரூ.2 கோடி மெகா திட்டம்- 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி, உணவு & தங்குமிடம்
திருச்சி மற்றும் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சக்தி நீட் அகாடமி சார்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ரூ.2 கோடி மதிப்பிலான இலவச நீட் பயிற்சித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சக்தி நீட் அகாடமியின் நிர்வாக இயக்குனர் அருணாச்சலம் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“எம்பிபிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழக அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி வருகிறது. இதன் மூலம் தற்போது 510 மருத்துவ இடங்கள் வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கிறது. இந்த கல்வி ஆண்டில் உணவு, தங்குமிடம், அரசு மாதிரி பள்ளிகளில் பயின்ற 20 சதவீத மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் தங்களுக்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இருப்பினும், தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் 400-க்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்தும் எம்பிபிஎஸ் சீட் கிடைக்காமல் வாய்ப்பை இழந்துள்ளனர். அத்தகைய மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க சக்தி நீட் அகாடமி முன்வந்துள்ளது.
இந்த ஆண்டு நீட் தேர்வில் 400-க்கும் மேல் மதிப்பெண் பெற்று மருத்துவ இடம் கிடைக்காத 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ‘முதலில் வருபவருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் முற்றிலும் இலவசமாக ஓராண்டு பயிற்சி அளிக்க உள்ளோம்.
ஒரு மாணவருக்கு தலா ரூ.2 லட்சம் வீதம், மொத்தம் ரூ. 2 கோடி செலவில் பயிற்சி கட்டணம், தங்குமிடம், உணவு மற்றும் சீருடை என அனைத்தும் 100% இலவசமாக வழங்கப்படும். தமிழ்நாட்டின் எந்தப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களும் இதில் சேர்ந்து பயன்பெறலாம். அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களது மருத்துவக் கனவை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது அகாடமியின் இணை இயக்குனர் ஆதித்யா அருணாச்சலம் உடனிருந்தார்.