காட்டூரில் தனியார் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர் சங்கத்தினர் தொடர் போராட்டம்
திருச்சி, ஜூலை 21 திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியில் இளங்கலைபடித்த இந்திய மாணவர் சங்க மாணவர்களை முதுகலை படிப்பில் சேர்ப்பதற்கு தடை விதித்தகல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இந்திய நாயக மாணவர் சங்கம் அமைப்பினர் கல்லூரி முதல்வர் அறையை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக சுவரொட்டிகள் ஒட்டியதால் வெள்ளிக்கிழமை அன்று திடீரென்று கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நேற்றும் தொடர்ந்து கல்லூரி வாயில் முன் படுத்து உறங்கும் போராட்டம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் உருமு தனலட்சுமி கல்லூரி இயங்கி வருகிறது இந்த கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரி ஆகும் இந்த கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் சிலர் இந்திய நாயக மாணவர் சங்கத்தில் உள்ளனர்.
சமீப காலமாக இந்திய மாணவர் சங்கத்தினர் இந்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி முன்பு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் இந்த மாணவர்கள் மீண்டும் முதுகலை வகுப்பில் சேர்த்தால் கல்லூரியில் மற்ற மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டுவார்கள் என கருதிய கல்லூரி நிர்வாகம் இளங்கலை முடித்த இந்திய நாயக சங்க மாணவர்களை முதுகலை வகுப்பிற்கு சேர்ப்பதற்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது
கல்லூரி நிர்வாகத்தின் இந்த முடிவை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் இணைந்து கல்லூரிமுதல்வர் அறையை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக திருவெறும்பூர் மற்றும் காட்டூர் பகுதிகளில் சுவரொட்டிகளை ஓட்டினர்.
இதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தினால் பிரச்சனை ஏற்படும் என கருதிய கல்லூரி நிர்வாகம் திடீரென வெள்ளிக்கிழமை காலை கல்லூரி விடுமுறை என அறிவித்தது இதனால் கல்லூரிக்கு வந்த பலமாணவ மாணவிகள் கல்லூரி விடுமுறை என்பதால் திரும்பி வீட்டுக்கு சென்றனர். இந்த நிலையில் சனிக்கிழமை அன்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் திருச்சி மாவட்டத் தலைவர் மோகன் குமார் தலைமையில் கல்லூரி நுழைவாயில் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் இதே கோரிக்கையை வலியுறுத்தி துவாக்குடி அரசு கலைக்கல்லூரி முன்பு கிளை தலைவர் பிரதீப் குமார் தலைமையில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்
இரண்டாவது நாளான நேற்று உருமு தனலட்சுமி கல்லூரி வாயில் முன்பு படுத்துறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் தாசில்தார் ஜெயப்பிரகாசம் சம்பவ இடத்திற்கு வந்து மாணவ சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.