விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி, புத்தாநத்தம், வளநாடு, துவரங்குறிச்சி உள்ளிட்ட காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்ற நிலையில் குளத்தில் சிலைகளை கரைக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி புத்தாநத்தம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 16 விநாயகர் சிலைகளின் விஜர்சன ஊர்வலம் இன்று நடைபெற்றது. புத்தாநத்தம், இடையபட்டி, மெய்யம்பட்டி, முத்தழகம்பட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வைக்கப்பட்டு தாரை தப்பட்டை முழங்க மக்கள் புடை சூழ புத்தாநத்தம் கடைவீதி, இடையபட்டி வழியாக சிறுவர்கள் இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிலையில் ஊர்வலத்தின் போது போலீசார் தரக்குறைவாக பேசியதாக கூறி ஊர்வலத்தில் சென்றவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஊர்வலத்தை பாதியிலேயே நிறுத்தி திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து அரைமணி நேரத்திற்குப்பிகு மீண்டும் ஊர்வலத்தை ஆரம்பித்து சிலைகளை எடுத்துச் சென்று இடையபட்டியில் உள்ள சுந்தர விநாயகர் கோவில் குளத்தில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக பாதுகாப்பு பணியில் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.