திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் திருவீதிஉலா!
பன்னிரு திருமுறை வாரவழிபாட்டு கழகத்தின் 53வது ஆண்டு விழா, திருமுறை விழா, அறுபத்துமூவர் திருவீதி உலா ஆகிய முப்பெரும் விழா திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நடைபெற்றது. விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் காலை ஆன்மார்ந்த சிவபூஜை, திருமுறைவிண்ணப்பம், மகேஸ்வரபூஜை, சொற்பொழிவரங்கம் மற்றும் சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றன. இரண்டாம் நாளான
நேற்று காலை 6 மணிக்கு அறுபத்துமூவர் திருநீற்றான் மதில் வலம் வந்தனர். காலை 7.30 மணிக்கு அறுபத்து மூவர் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் கூட்டு வழிபாடு, மகேஸ்வரபூஜை, திருமுறைகள் பாராயணம் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு அறுபத்துமூவர் நான்காம் பிரகாரத்தில் வீதி உலா வந்து கோவிலை அடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மற்றும் அறுபத்துமூவர் நாயன்மார்களையும் வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் மற்றும் பன்னிரு திருமுறை வார வழிபாட்டு கழகத்தினர் செய்திருந்தனர்.