மர்மவிலங்கு கடித்து ரூ.6 லட்சம் மதிப்பிலான 47 செம்மறி ஆடுகள் பலி
திருச்சி, ஜன.22 மணப்பாறை அருகே மர்ம விலங்கு கடித்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 47 செம்மறி ஆடுகள் கொடூரமாக உயிரிழப்பு. நிவாரணம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மேலே ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 40. இவரது உறவினர் வெள்ளையக்கோன்பட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி வயது 47. இருவரும் பண்ணப்பட்டியில் கருப்பூர் ரெட்டியபட்டி மலை அருகில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பட்டி அமைத்து சுமார் 200 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல் அப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை ஆடுகளை மீண்டும் பட்டிக்கு ஓட்டிச் சென்றபோது திடீரென ஆடுகள் மிரண்டு ஓடியுள்ளன. வானம் இருட்டி விட்டதால் ஆடுகளை தேட முடியாமல் மீதமிருந்த ஆடுகளை பட்டிக்கு ஓட்டிச் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை இருவரும் ஆடுகளைத் தேடிச் சென்ற போது மலைப்பகுதியில் ஆங்காங்கே ஆடுகள் கழுத்து, கால், வயிறு உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் கடித்து ரத்தத்தை உறிஞ்சி கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மலைப்பகுதியில் ஆங்காங்கே ஆடுகள் இறந்து கிடந்ததால் மர்ம விலங்குகள் கடித்துக் கொண்டிருக்கலாம் என எண்ணினர் மேலும் ஆடு இறந்து கிடந்த இடங்களின் அருகே விலங்குகளின் கால் தடமும் இருந்தது. மர்ம விலங்குகள் கடித்துக் குதறியதில் 47 ஆடுகள் உயிரிழந்தது. இதன் மதிப்பு சுமால் ரூபாய் 6 லட்சம் என ஆட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வருவாய் துறையினர், மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். கால்நடை மருத்துவ டாக்டர் ரமேஷ் ஆடுகளை மருத்துவ பரிசோதனை செய்தார். மேலும் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிய ஐந்து ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார்.
ஆடுகள் உயிரிழந்த இதே பகுதியில் அருகில் உள்ள நத்தம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த மணி, துரை, ராமச்சந்திரன், ரவி, ராசு, மலர் ஆகியோரின் சுமார் 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் கடந்த ஆறு மாதங்களாக அவ்வப்போது மாயமான நிலையில் தற்போது ஒரே நேரத்தில் 47 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளிடமிருந்து கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயிர் இழந்த ஆடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என ச
கோரிக்கை விடுத்துள்ளனர்.